கோட்டக்குப்பம் அருகே காரில் மதுப் புட்டிகளை கடத்திய நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட மது விலக்குப் பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவலர் அழகுவேல் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை
பிற்பகல் கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டனர்.
அதில், விலையுயர்ந்த 72 புதுச்சேரி மதுப்புட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம்.
இது தொடர்பாக, காரில் இருந்த மரக்காணத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி(65) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அதில், மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, சொகுசு கார், மது புட்டிகளை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவிந்தசாமியை மது விலக்கு போலீஸார் கைது செய்தனர்.