விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது தாக்குதல்

விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குத் தொடுத்த பெண்ணை வழக்குரைஞர் செவ்வாய்க்கிழமை தாக்கினார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குத் தொடுத்த பெண்ணை வழக்குரைஞர் செவ்வாய்க்கிழமை தாக்கினார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒளவையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகள் மகாலட்சுமி (எ) அம்பிகா(29). இவருக்கும், செஞ்சி அருகேயுள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தை அவரது கணவரின் பராமரிப்பில் உள்ளது.
 இந்த நிலையில், அம்பிகா விவாகரத்து கோரி, திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
 இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்காக நீதிமன்றத்துக்கு தனது தாய் மலருடன் வந்த அம்பிகாவுக்கும், வழக்குரைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அம்பிகாவை அந்த வழக்குரைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அம்பிகா, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி நீதிமன்றத்திலிருந்து வெளியே ஓடி வந்தார். அவரை, நீதிமன்ற நுழைவாயிலில் காவலில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், அந்த பெண்ணையும், அவரது தாயையும் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com