மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செஞ்சி டி.எஸ்.பி. நீதிராஜ் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் மருதப்பன் வரவேற்றார். கூட்டத்தில் காவல் துறையினர் அனுமதி அளிக்கும் இடங்களில் மட்டுமே பிரசாரக் கூட்டத்தை நடத்துவது, தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை நடத்த முன்னதாக காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களில் பிரசாரம் செய்யக் கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சி மஸ்தான், வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர் வி.ரங்கநாதன், மாவட்ட பாமக செயலர் கனல்பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.