சின்னசேலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே வி.கூட்டுச்சாலைப் பகுதியில் வட்டாட்சியர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் மதிவாணன் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு சேலம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சின்னசேலம் அருகே உள்ள கருங்குழி பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சசிகுமார் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்தத் தொகை கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நெல் அறுவடை இயந்திரத்துக்கு உதிரிப்
பாகங்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக சசிகுமார் தெரிவித்துள்ளதால், அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.