செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ச.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
செஞ்சி வட்டாட்சியர் ஜி.ஆதிபகவன், மேல்மலையனூர் வட்டாட்சியர் செந்தில்குமார், தனி வட்டாட்சியர் எஸ்.நெகருன்னிசா, வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கே.ராதாகிருஷ்ணன் (செஞ்சி), ஆர்.அருண்மொழி (மேல்மலையனூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல அலுவலர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பட்டது.
ஒரு மண்டல அலுவலர் 10 அல்லது 12 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள குறை, நிறைகளை கண்டறிந்து தேவையானவற்றை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்கான சாய்தளம் ஆகிய வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் நாளன்று செய்யவேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொகுதியில் மொத்தம் உள்ள 304 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மண்டல அலுவலர்கள் பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.