பெற்றோருக்கு பாத பூஜை செய்த கல்லூரி மாணவிகள்
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா மகா வித்யாலயம் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் பெற்றோருக்கு பாத பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் தங்களது பெற்றோரை சிவன்- பார்வதியாகவும், மகாவிஷ்ணு -லட்சுமியாகவும் பாவித்து அவர்களின் திருவடிகளுக்கு பூஜை செய்து வணங்கினர்.
கல்லூரிச் செயலர் யதீஸ்வரி அனந்தப்ரேமப்ரியா அம்பா பாத பூஜை விழாவுக்கு தலைமை வகித்தார். அவர்தம் உரையில், பெற்றோரின் திருவடிகள் போற்றதலுக்குரியது என்றும், அவர்களின் தியாகத்துக்கு நீங்கள் செய்யும் மரியாதையே இப்பாத பூஜை என்றும், எந்த ஒரு செயலாற்றுவதற்கும், பெற்றோர்களின் ஆசிர்வாதம் இன்றியமையாதது என்றும் ஆசியுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு எல்லாம் வல்ல கடவுளின் அருள் கிடைத்து சீரும், சிறப்புமாக வாழ ஆசிர்வதித்தனர். கல்லூரியின் இணைச் செயலர் ப்ரம்மச்சாரிணி ப்ரேமப்ரணா மாஜி மற்றும் கல்லூரி முதல்வர் வே.பழனியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை வணிகவியல் துறைத் தலைவர் க.லாவண்யா ஒருங்கிணைத்தார்.