பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சரவணன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் ஆ.சௌரிராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் கே.ராமசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.கலியமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் கே.எஸ்.அப்பாவு, தேசிய மாதர் சம்மேளன மாவட்டச் செயலர் ஆ.வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டிப்பதுடன், அதில் ஈடுபட்ட கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். சமூக விரோத கும்பலுக்கு பின்புலமாக இருந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திய முக்கிய பிரமுகர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில், உயர் நீதிமன்ற பெண் நீதிபதி மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாவட்டத் தலைவர் எஸ்.விஜய், பொருளாளர் ரஞ்சித், துணைத் தலைவர்கள் வெற்றிவேல், ஏழுமலை, தர்மேந்திரன், மணிவாசகம், முனியப்பன், இஸ்மாயில், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட இளைஞர் பெருமன்றத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் (எம்.எல்) பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.