விழுப்புரம்: மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கைவினைஞர் முன்னேற்றக் கட்சி அறிவித்தது.
இந்தக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் சேகர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநில பொதுச் செயலர் பொன்.கனகராஜ், மாநிலப் பொருளாளர் செந்தில்குமார், அமைப்பாளர் உமாபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மாநில அமைப்பாளர் உமாபதி கூறியதாவது: வருகிற மக்களவைத் தேர்தலில் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலர் ராஜேந்திரன், புதுவை மாநில அமைப்பாளர் தனாளன், நிர்வாகி சதீஸ்வரன், இலக்கிய அணிச் செயலர் சிவக்குமார், தச்சுப் பிரிவுத் தலைவர் அப்பர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.