திருக்கோவிலூர்: கல்வராயன்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாச்சேரியில் தினமணி நாளிதழ், ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய வாக்காளர் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு அறக்கட்டளையின் கூடுதல் செயலர் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தார்.
சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தே.சிவச்சந்திரன், தேர்தல் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்தார்.
அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ராணி தனபால், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து, விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, அதன் நோக்கம் குறித்துப் பேசினர்.
கல்வராயன்மலை நடமாடும் மருத்துவ அலுவலர் ஆரிப்புல்லா, வாழ்க வளமுடன் சமூக நல அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சு.ஸ்ரீராமன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மா.வினோதினி வரவேற்றார். பின்னர் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
பாச்சேரி, தும்பை, மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் இந்த தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மேலும், பாச்சேரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.