மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள 4,043 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி முறையில் தேர்வு செய்து சனிக்கிழமை தயார்படுத்தப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவைத் தொதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அரசுக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கணினி மூலம் குலுக்கல் முறையில், வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இல.சுப்பிரமணியன் தலைமையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. அதிமுக நகர செயலர் ஜி.பாஸ்கரன், திமுக மாவட்ட பொருளாளர் என்.புகழேந்தி, பாஜக மாவட்ட பொதுச் செயலர் சுகுமார், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், பகுஜன் சமாஜ் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான 4,043 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்), 4043 மின்னணு வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்), வாக்களிப்பதை உறுதி செய்யும் 4,172 இயந்திரங்கள் (விபாட்) ஆகியவை கணினி பட்டியல் மூலம் கணினி வரிசை எண்களின்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்ப தயார் செய்யப்பட்டன.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தலின்போது அந்தந்த தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வீ.பிரபாகர், உதவி ஆட்சியர்கள் மெர்சி ரம்யா, ஸ்ரீதர், கோட்டாட்சியர் குமாரவேல், சட்டப் பேரவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.