கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இளைஞர் பலி
By DIN | Published On : 05th May 2019 05:36 AM | Last Updated : 05th May 2019 05:36 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வரஞ்சரம் காலனி பகுதியைச் சேர்ந்த ராமு (41), அவரது மகன் ரஞ்சித், ராமுவின் அண்ணன் கருப்பையா மற்றும் அவரது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் மனைவி அசோதை (55), திருவண்ணாமலை மாவட்டம், கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மனைவி மீனாட்சி ஆகியோர் காரில் கடலூர் மாவட்டம், ஒரத்தூரில் உள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக வெள்ளிக்கிழமை சென்றனர். காரை கடலூர் மாவட்டம், அ.மரூரைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் சின்னையன் (21) ஓட்டிச் சென்றார்.
கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு சனிக்கிழமை அதிகாலை அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஈய்யனூர் - விருகாவூர் சாலையில் எஸ்.ஒகையூர் அருகே வந்தபோது, கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ரஞ்சித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அசோதை, கார் ஓட்டுநரான சின்னையன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவலறிந்த வரஞ்சரம் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று ரஞ்சித்தின் சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...