விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சியை வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்கு, பொது நல அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில், 2018-19ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியுள்ளதை பாராட்டும் விதமாக, நம்ம விழுப்புரம் இணையதள அமைப்பு, உலக இலக்கியப் பேரவை, கல்வி, இலக்கிய அமைப்புகள் சார்பில் மாவட்ட கல்வி மேம்பாட்டுக்கான ஊக்கப் பெரு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, நம்ம விழுப்புரம் இணையதள அமைப்பின் புரவலர் நத்தர்ஷா தலைமை வகித்தார்.
மாவட்டக் கல்வி அலுவலர் க.ஆனந்தன், தமிழ்ச்சங்கத் தலைவர் சி.மா.பாலதண்டாயுதம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.சந்திரசேகர், கோலியனூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ரவி, தளவானூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் த.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக இலக்கியப் பேரவைத் தலைவர் இரா.மோகனசுந்தரம் வரவேற்றார். சங்க இலக்கியப் பொதும்பர் அமைப்பு மா.சற்குணம், அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் எல்.ரவிசங்கர், பாரதி சிந்தனப்புலம் இரா.ராமமூர்த்தி, வாசகர் வட்டத் தலைவர் கோ.செங்குட்டுவன், தலைமை ஆசிரியர்கள் த.முருகவேள், அ.அளமதி, அ.துரைப்பாண்டி, கரிகாலசோழன் பசுமை மீட்புபடை அ.அகிலன், பா.கோபிநாத், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுவை எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி மற்றும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய 70 பள்ளிகளைப் பாராட்டி, அதன் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் த.பாலு நன்றி கூறினார்.