காணை வட்டார விவசாய நிலங்களில் மண்மாதிரி சேகரிப்பு பணிகளை வேளாண் துணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.
காணை வட்டாரத்தில் உள்ள 62 கிராமங்களிலும் விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பெரும்பாக்கம், கல்பட்டு கிராமங்களில் நடைபெற்ற இந்தப் பணிகளை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் செல்வபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, விவசாயிகளிடம் மண்மாதிரிகள் எடுக்கும் முறை, அதன் அவசியம் குறித்து விளக்கினார். ஒவ்வொரு கிராமத்திலும், குறுகியகாலப் பயிர்களை பயிரிடுவதற்கும், நீண்ட கால மரப்பயிர்களை பயிரிடுவதற்கும், உரங்கள் பரிந்துரை செய்திடும் வகையில், இரு வகையான மண்மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
அந்த மண் மாதிரி முடிவுகள் அடிப்படையில், பரிந்துரை செய்த உரங்களை மட்டும் பயன்படுத்தி, தேவையற்ற உரச்செலவுகளை குறைத்திட வேண்டும். மண் பரிசோதனை செய்திடவும், உரங்கள் விநியோகம் செய்வதில் அரசு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
கோடை உழவின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காணை வட்டார உதவி இயக்குநர் க.சரவணன் விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் வரதராஜன், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபாகரன், மணிவண்ணன், செல்வகுமார், தொழில் நுட்ப மேலாளர் அன்பு, இளங்கோவன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.