கள்ளக்குறிச்சி வட்டம், முடியனூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 61 அடி உயரமுள்ள தூக்குத்தேர் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, நிகழாண்டு திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோயிலின் முன் பாரதம் பாடப்பட்டு வருகிறது. தினந்தோறும் இரவு பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து, 61அடி உயரமுள்ள தூக்குத்தேரில் திரெளபதி அம்மன் சமேத அர்சுணர் சுவாமி எழுந்தருளினார்.
பின்னர், இந்தத் தேரை தோள்களில் சுமந்தவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் சென்றனர். திரளான ஊர் பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.
பெண்கள் கோயிலில் மாவிலக்கிட்டு வழிபட்டனர். வெள்ளிக்கிழமை (மே 17) தீமிதி விழாவும், சனிக்கிழமை (மே 18) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.