கள்ளக்குறிச்சி அருகே தனது அண்ணன் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தம்பி போலீஸில் புகார் செய்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன்கள் ராமச்சந்திரன் (33), மகேந்திரன் (32). ராமச்சந்திரன் கடந்த 8 ஆண்டுகளாக அவரது மாமனாருடன் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் வசித்து வந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஊருக்கு வந்தாராம். அன்று மாலை மீண்டும் பூட்டை கிராமத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், வெள்ளிக்கிழமை காரனூர் ஏரிக்கரை பாலத்தின் கீழே இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி மகேந்திரன் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.