சரக்கு வாகனம் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி
By DIN | Published On : 18th May 2019 07:57 AM | Last Updated : 18th May 2019 07:57 AM | அ+அ அ- |

சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் தேரடி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ராஜா (29). இவரது மனைவி சுகன்யா. தம்பதியின் குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்த புக்கிரவாரி கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சரக்கு வாகனத்தில் சுமார் 15 பேர் வந்தனராம்.
கோயிலில் வழிபாடு முடிந்து, வியாழக்கிழமை இரவு மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக கூகையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை மேலப்புலியூரைச் சேர்ந்த அருணாசலம் மகன் மணிகண்டன் (45) ஓட்டிச் சென்றாராம்.
வீரபயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில், சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மேலப்புலியூரைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி உண்ணாமலை (65), பெரியசாமி மனைவி அமுதா (45), துரைக்கண்ணு மனைவி பெரியம்மா (55), பாலகுமார் மனைவி பஞ்சவர்ணம் (26), கச்சிராயப்பாளையத்தை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் மணிவேல் (25), அய்யாக்கண்ணு மனைவி பெரியசாமி (50) உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டாராம்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, உண்ணாமலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.