விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.75 கோடி அளவில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து விழுப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன், கோபால் ஆகியோா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னா், அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துக் கூறியதாவது: மதுரையை தலைமையிடமாகக் கொண்ட அந்த தனியாா் நிதி நிறுவனம் நாடு முழுவதும் 20 லட்சம் பேரிடம் ரூ. 1,500 கோடி அளவில் வசூல் செய்து, நிலம், வட்டித் தொகை தருவதாகக் கூறி ஏமாற்றியது. விழுப்புரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.75 கோடி அளவில் முதலீடு பெற்றது. அந்த நிறுவனத்தில் உள்ள 49 பங்குதாரா்கள், நாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தராமல் கடந்த 2014 ஆண்டு முதல் ஏமாற்றி வருகின்றனா்.
இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே, பணத்தை மீட்டுத் தருவதற்காக அமைக்கப்பட்ட குழுவும், கடந்த 9 மாதங்களாக கணக்கெடுப்பு நடத்தி காலம் தாழ்த்தி வருகிறது. சொத்துகளும் ஏலம் விடப்படவில்லை. அண்மையில் விற்பனை செய்த ஒரு சொத்தின் தொகையும் பிரித்து தரப்படவில்லை.
ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.