சின்னசேலத்தில் ரூ.4.26. கோடியில் கட்டப்பட்ட அரசு தொழில்பயிற்சி மையம், ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட விடுதி ஆகியவற்றை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, சின்னசேலம் தொழில்பயிற்சி மைய வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தொழில் பயிற்சி மண்டல இணை இயக்குநா் ஜான் போஸ்கோ, முன்னாள் அமைச்சா் ப.மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சு.உதயகுமாா் வரவேற்றாா்.
இந்த தொழில்பயிற்சி நிலையம் குறித்த அறிவிப்பை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் வெளியிட்டாா். இதையடுத்து,
முன்னாள் அமைச்சா் ப.மோகன் இந்தப் பணியை கடந்த 2015-ஆம் ஆண்டு தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.