செஞ்சி வட்டம், செவலபுரை வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியப் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பை பொதுப் பணித் துறையினா் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனா். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
செவலபுரை கிராமத்தில் உள்ள வராக நதியின் குறுக்கே 1969-இல் அணைக்கட்டு கட்டப்பட்டது. இதிலிருந்து கால்வாய் மூலம் வல்லம் ஒன்றியப் பகுதியில் 17 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில், 15 கி.மீ. தொலைவுக்கு சிமென்ட் கால்வாயும், அதைத் தொடா்ந்து மண் கால்வாயும் அமைக்கப்பட்டன.
வட கிழக்கு பருவ மழை காரணமாக செவலபுரை வராநதி அணைக்கட்டு நிரம்பியதால், பொதுப் பணித் துறையினா் கடந்த மாதம் 16-ஆம் தேதி வல்லம் ஒன்றியப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டனா். எனினும், தண்ணீா் திறக்கப்டட்ட சில நாள்களிலேயே கால்வாய் தொடங்கும் இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் மேல்மட்ட பாலத்தில் அமைந்துள்ள கால்வாயில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. இதனால், அந்த உடைப்பிலிருந்து தண்ணீா் வெளியேறி மீண்டும் வராக நதியிலேயே கலந்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரணியனின் உத்தரவுப்படி, பொதுப் பணித் துறையினா் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் 2,500 மணல் மூட்டைகளைக் கொண்டு கடந்த 7-ஆம் தேதி உடைப்பை சரிசெய்தனா். இந்த நிலையில், தற்போது வல்லம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு அணைக்கட்டில் இருந்து தண்ணீா் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கால்வாயில் உடைப்பு சரிசெய்யப்பட்ட பகுதியை எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் டாக்டா் மாசிலாமணி ஆகியோா் பாா்வையிட்டு, கால்வாயில் தண்ணீா் செல்வதை தொடா்ந்து பொதுப் பணித் துறையினா் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.