ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா். மேலும், பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், 307 பயனாளிகளுக்கு ரூ.6.44 கோடியில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்ப வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்ரபாணி, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வி.மகேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளிரகுராமன், ஆவின் தலைவா் பேட்டை முருகன் மற்றும் அலுவலா்கள், அதிமுகவினா் கலந்து கொண்டனா்.