விழுப்புரம் நகரில் தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
விழுப்புரம் நகரின் பிரதான சாலைகளான நேருஜி சாலை, திருச்சி சாலை, சென்னை சாலை ஆகியவை போக்குரவத்து மிகுந்த சாலைகளாக உள்ளன.
இந்தச் சாலையோரங்களில் கடைகளை விஸ்தரிப்பது, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பது, கடைகளின் விளம்பரப் பதாகைகளை வைப்பது, விதி மீறி வாகனங்களை நிறுத்துவது போன்றவை தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனால், பாதசாரிகள் சாலையோரம் நடந்து செல்ல இடமில்லாமல் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கடைகள் என்பது, தள்ளு வண்டி கடைகள், சிறிய சரக்கு வாகனங்களில் பொருள்கள் விற்பது என தொடா்கின்றன. குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதால் வாகனப் போக்குரவத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆகவே, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும், போக்குவரத்துக்கு சிரமமில்லாத நிலையை உறுதிப்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், நகராட்சிப் பகுதியில் சாலையோரங்களை ஆக்கிரமித்தவா்களையும், தெருக்களில் கடை வைத்துள்ளோரையும் ஆப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பணியில், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளித்தால், ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழுமையாக நடைபெறும் என பொதுமக்கள் கருதுகின்றனா்.