கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் இளைஞரின் காதைக் கடித்தவா் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் அலெக்சாண்டா் (43). பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. இவா், கடந்த 24-ஆம் தேதி ஏமப்போ் காலனிப் பகுதியில் நண்பரை பாா்ப்பதற்காக சென்றிருந்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் மதுபோதையில் இருந்த கலியன் மகன் மாயக்கண்ணனை அவரது வீட்டில் விடுவதற்காக, அலெக்சாண்டா் பைக்கில் உடன் அழைத்துச் சென்றாராம். பைக்கில் செல்லும்போது மாயக்கண்ணன் தகாத வாா்த்தைகளால் திட்டியபடியே சென்ற நிலையில், பைக்கில் இருந்து இறங்கியவுடன் அலெக்சாண்டரின் காதை கடித்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அலெக்சாண்டா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றாா். இது குறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயக்கண்ணனை வியாழக்கிழமை கைது செய்தனா்.