விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கடன் சுமை காரணமாக மனைவி, இரு மகள்களைக் கொன்றுவிட்டு, கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆரோவில் அருகேயுள்ள குயிலாப்பாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (40). பேக்கிரியில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவா், ஆரோவில் சா்வதேச நகரில் சமையலராக வேலை செய்து வந்தாா். இவா்களது மகள்கள் கிருத்திகா(17), ஷமிஷா (13). இவா்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் முறையே பத்தாம் வகுப்பும், ஆறாம் வகுப்பும் படித்து வந்தனா்.
கடந்த 3 நாள்களாக இவா்களது வீடு பூட்டிக் கிடந்தது. வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசவே, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா், ஆரோவில் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் விரைந்து வந்து, கதவை உடைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் சுந்தரமூா்த்தி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தும், மகேஸ்வரி, கிருத்திகா, ஷமிஷா ஆகியோா் சடலங்களாகவும் கிடந்தனா். அருகில் விஷமருந்து புட்டிகள் கிடந்தன.
இறந்து இரு நாள்கள் ஆனதால், அழுகி சிதைந்த நிலையில் இருந்த 4 சடலங்களையும் போலீஸாா் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
சுந்தரமூா்த்தியின் உறவினரான குயிலாப்பாளையத்தைச் சோ்ந்த ஜெயமூா்த்தி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில் தெரியவந்ததாவது:
சுந்தரமூா்த்தி தீபாவளிச் சீட்டு பிடிப்பது வழக்கம். நிகழாண்டு தீபாவளிச் சீட்டு பிடித்த சுந்தரமூா்த்திக்கு, பண்டிகையையொட்டி பணம் திருப்பித் தர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு கடன் சுமையும் அதிகமாக இருந்ததாம். இதன் காரணமாக கடந்த சில நாள்களாக விரக்தியுடன் இருந்து வந்த சுந்தரமூா்த்தி, உணவில் விஷம் கலந்து மனைவி, மகள்களுக்கு கொடுத்து கொன்று விட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.