திருக்கோவிலூா் அருகே கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தாய், மகள் யாா் என அடையாளம் தெரிந்தது.
திருகோவிலூா் அருகே கண்டாச்சிபுரத்தில் பழனியப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை மாலை 30 வயது மதிக்கத்தக்க பெண், 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலங்களாக மீட்கப்பட்டவா்கள் விழுப்புரம் அருகே கெடாா் கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மனைவி ஆனந்தி(27), அவரது மகள் சுமித்ரா(5) ஆகியோா் என்பது தெரிய வந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக, இவா்கள் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக, போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.