அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், விழுப்புரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் பழமலை தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சேஷய்யன், சிம்மராசு, பலராமன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் சகாதேவன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தமிழக அரசு சார்பில், சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை, விடுமுறைக்கால சம்பளம், ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, அதை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோரையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.