உளுந்தூர்பேட்டை அருகே ஏரிகளில் மூழ்கி 3 சிறார்கள் பலி

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஏரிகளில் மூழ்கி 3 சிறார்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஏரிகளில் மூழ்கி 3 சிறார்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் அருகே உள்ள பூவனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜானகிராமன். இவரது மகன் தேவநாதன் (7), அங்குள்ள அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் பெங்களூருவில் வேலை செய்வதால், தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்த தேவநாதன், சக நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பூவனூர் ஏரிக்குச் சென்று குளித்துள்ளார். அப்போது, ஏரியில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற உறவினர்கள், ஏரியில் மூழ்கிய தேவநாதனின் உடலை மீட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில்,  திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேவநாதனின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமம் கிராமத்தில்...: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏமம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் (40). இவர், சென்னை கோயம்பேட்டில் குடும்பத்தோடு தங்கி, காய்கனிக் கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் ஏமம் கிராமத்தில் இறந்துபோனதால், துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், ஏமம் கிராமத்திலிருந்த ஜான் மகன் லியோ (6), உறவினரான சின்னப்பராஜ் மகன் டேலிக்டேனியலுடன் (10) சேர்ந்து அந்தக் கிராமத்தில் காலனிப் பகுதியிலுள்ள சின்ன ஏரியில் சனிக்கிழமை குளித்துள்ளார்.
அப்போது, இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்களில் லியோ உயிரிழந்தார்.
 டேலிக்டேனியல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தலவாடி கிராமத்தில்...: உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டு அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஸ்ரீகாந்த் (15). இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தீனா (14), வினோத் (14). இவர்கள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர். 
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிலிருந்து அருகே உள்ள ஏரிக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது, ஏரியில் மண் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட ஆழமான பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ஸ்ரீகாந்த் தத்தளித்துள்ளார்.  இதனால், மற்ற இருவரும் கூச்சலிட்டுள்ளனர். தகவலறிந்து கிராமத்தினர் வருவதற்குள் அவர் மூழ்கி மாயமாகினார்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த நிலைய அலுவலர் குமார் தலைமையிலான திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி ஏரியில் மூழ்கிய ஸ்ரீகாந்தை உயிரிழந்த  நிலையில் சடலமாக மீட்டனர். 
இதுகுறித்த புகாரின் பேரில்,  திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com