உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்க காடவராயரின் 770-ஆவது பிறந்த நாள் விழா பால்குட ஊர்வலத்துடன் புதன்கிழமை நடைபெற்றது.
சேந்தமங்கலத்தில் காடவராய மன்னன் வழிபட்ட வானிலை கண்டீஸ்வரர் என்றழைக்கப்படும் ஆபத்சகாய ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோப்பெருஞ்சிங்க காடவராயரின் குலதெய்வமான, அங்குள்ள மழையம்மன் கோயிலில் இருந்து, சு.வீரபாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடை, செவ்வாடை அணிந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து, வானிலை கண்டீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், அன்னதானம் நடைபெற்றது.
வழிபாட்டில், உலக தமிழர் நடுவம் ஒருங்கிணைப்பாளர் சித்தர் திருத்தணிகாசலம், பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு, கட்சி நிர்வாகிகள் வைத்தி, தங்கஜோதி, கோ.ஜெகன், தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் மாநில துணைச் செயலர் கண்மணி குணசேகரன், இயக்குநர் சுபாஷ் போஸ், சீனிவாசன் மற்றும் கச்சிராயர்கள் வழித்தோன்றல்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.