விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளின் பொறுப்பாசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அ.ஆனந்தன் தலைமை வகித்தார். உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் பி.ரவி, திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் துரைபாண்டியன், செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் சீ.மா.பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.பாபுசெல்வதுரை வரவேற்றார்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர்சந்திரகுமார் பங்கேற்று, செஞ்சிலுவைச் சங்க கொடியேற்றி வைத்து முகாமைத் தொடக்கிவைத்தார்.
விழுப்புரம் ஓசோன் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ராமன் மரக்கன்றுகளை வழங்கினார்.
பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், ஆசிரியர்கள், பள்ளியை பசுமையாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, இளம் செஞ்சிலுவைச் சங்க பயிற்றுநர்கள் தண்டபாணி, சின்னப்பன், பாலசுப்பிரமணியபாரதி, பள்ளி ஆய்வாளர் ராமதாஸ், ஆசிரியர் ஞானவடிவு, சங்க இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.தமிழழகன், மேரிஸ்டெல்லா, சந்தியா, துரை உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர். ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் தங்கராஜ் நன்றி கூறினார்.