வானூர் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் செவ்யவாய்க்கிழமை பறித்துச் சென்றனர்.
வானூர் அருகே பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(74). இவரது மனைவி வசந்தா(40). இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் வாசலில் நின்றிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கட்டில், மெத்தை போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை தவணை முறையில் தருகிறோம் எனக் கூறி, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
குடி நீர் கொண்டு வர, வீட்டுக்குள் சென்ற வசந்தாவை திடீரென பின்தொடர்ந்து வந்த அந்த நபர்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர். அந்த நகையின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம்.
இது தொடர்பாக, வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.