கண்டமங்கலத்தில் நடைபெற்ற காச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கண்டமங்கலம் வட்டாரம் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற காச நோய் விழிப்புணர்வு முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி தலைமை வகித்து, காச நோய் பரவல், பரிசோதனை, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். மருத்துவ அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற காச நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதுநிலை சிகிச்சை ஆய்வக மேலாளர் தமிழரசி, ஊட்டச்சத்து உணவை வழங்கினார் .