பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொது சுகாதார அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
மாநில இணைச் செயலர் பத்மநாபராவ், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்டத் தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொது சுகாதாரத் துறையில் ஏற்கெனவே 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற விகிதத்தில், 8,700 துணை சுகாதார ஆய்வாளர்கள்(நிலை-2) என்று 8,700 நபர்கள் இருக்க வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறையை காரணமாகக்காட்டி, 1,600 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், நோய் கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் முடங்கும் சூழல் உள்ளது. ஆகையால், அரசாணை எண்கள் 337 மற்றும் 338 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, சேப்பாக்கத்தில் செப்.26-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
சங்க நிர்வாகிகள் முருகையன், பாபு, சிவசங்கர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். சங்க பொருளாளர் பி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.