சென்னை நீலாங்கரையில் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கணவர் திண்டிவனம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தனசேகரன் (39). இவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அகல்யாவை (30) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி குடும்பத்தகராறு காரணமாக, அகல்யாவை தனசேகரன் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்து வந்த தனசேகரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், திண்டிவனம் நடுவர் நீதிமன்றம் 2-இல் நீதிபதி நளினி முன்னிலையில் தனசேகர் வியாழக்கிழமை
சரணடைந்தார். அவரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.