விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நீதி நெறிக் கதைகளைக் கூறி நற்பண்புகளை வளர்க்கும் கல்வித் துறையின் புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக, இரு மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பள்ளி சிறார்களுக்கு, கல்வியுடன் கதை சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி, பள்ளிக் குழந்தைகளிடம் நற்பண்புகளை வளர்த்திட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் மாநில புதுமை நிதியின் கீழ், அரசு பள்ளிகளில் கதை மையங்களை ஏற்படுத்தி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள தொட்டக்கப் பள்ளிகளில், கதை மையங்களை ஏற்படுத்தி கதை சொல்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் அருகே வளவனூர் சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இதற்கான விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அ.ஆனந்தன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலர் துரைபாண்டியன் முன்னிலை வகித்தார். உதவித் திட்ட அலுவலர்கள் விழுப்புரம் ம.ரவிச்சந்திரன், கடலூர் பாபுவிநாயகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் விழுப்புரம் க.முனுசாமி, கடலூர் அ.ஆறுமுகம் ஆகியோர் பயிற்சியை தொடக்கி வைத்தனர்.
முகாமில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
பயிற்சி முடித்த ஆசிரியர்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட வேளைகளில் குழந்தைகளை ஈர்க்கும் முகபாவனைகளுடன் கதைகளைச் சொல்ல அறிவுறுத்தப்பட்டது.