உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை சின்னையா தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மகன் பிரவீன்குமார் (16). இவர், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தனது பெரியம்மா தேவி வீட்டுக்கு பிரவீன்குமார் சென்றிருந்தார்.
அங்கு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்சாதனம் ஒன்றை மின் இணைப்பில் பிரவீன்குமார் சொருகினாராம். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் பிரவீன்குமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.