விழுப்புரம்: தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 5-ஆம் நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தனித் தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், மாணவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை பெறவும், தேர்வு கட்டண உயர்வையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி திங்கள்கிழமை விழுப்புரம் அறிஞர் அண்ணா
அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 5-ஆம் நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.