கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்தில் கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்-ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு திங்கள்கிழமை மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி வட்டத்துக்கு உள்பட்ட மலைக்கோட்டாலம், வீரசோழபுரம், குடியநல்லூர், குருபீடபுரம், உடையநாச்சி ஆகிய ஊர்களுக்கான கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது. இதில் கையூட்டாக சில லட்சங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபு எம்எல்ஏ கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வட்டாட்சியர் தயாளன் பணி மாறுதலாகிச் செல்லவிருந்த நிலையில் அவசர, அவசரமாக கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தை அறிவித்துள்ளார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, முறைகேடு ஏதும் இல்லை என்கிறார். ஆனால், இந்த முறைகேட்டில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இதுபோன்ற அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரபு எம்எல்ஏ.