விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வெங்கந்தூர் காலனி சேறும் சகதியுமாக மாறியச் சாலையை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
வெங்கந்தூர் காலனியைச் சேர்ந்த பெண்கள் 50 பேர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துக் கூறியதாவது: வெங்கந்தூர் காலனியில் உள்ள மாதா கோயில் சாலை முதல் பிள்ளையார் கோயில் வரையான சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அவை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாகி மண் சாலையாகிப்போனதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக உள்ளது. இது தொடர்பாக, காணை வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி செயலரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.