கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சார்பில் வ.உ.சி, பாரதியார், பெரியார், அண்ணா, டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோரது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா தியாகதுருகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியின் தாளாளர் பொன்.ரா.மணிமாறன் தலைமை வகித்தார். கல்லை வீ.கோவிந்தராசன், செ.சு.மலரடியான் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் இரா.துரைசாமி வரவேற்றார்.
வ.உ.சி. உருவப் படத்தை கல்லை கோவிந்தராசன், பாரதியார் படத்தை கவிதைத் தம்பி, பெரியார் படத்தை புலவர் பெ.செயராமன், அண்ணா படத்தை குரு ஜெயப்பிரகாஷ், டாக்டர் இராதாகிருஷ்ணன் படத்தை தமிழரிமா தா.சம்பத் திறந்து வைத்தனர்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோ.இராதாகிருஷ்ணன் தியாகதுருகம் முன்னாள் பேரூராட்சித் தலைவரும், அண்ணா விருதாளருமான பொ.இராமகிருஷ்ணனுக்கு தந்தை பெரியார் விருதை வழங்கினார்.
சிவனார்தாங்கல் நடுநிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் செல்வம், பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்.வெங்கடேசன், பராசக்தி மெட்ரிக். பள்ளியின் ஆசிரியை நீ.மா.சாந்தி, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம், சிறுநாகலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நா.அறிவழகன் ஆகியோருக்கு ஆசிரியர் செம்மல் விருதை மா.சின்ராஜ் வழங்கினார். போலியோ ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு உலக அளவில் விருது பெற்ற சங்கராபுரம் வள்ளலார் மன்றப் பொருளாளர் இராம.முத்துகருப்பனுக்கு தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியின் தாளாளர் பொன்.ரா.மணிமாறன் மக்கள் சேவகர் விருது வழங்கினார்.
சங்கச் செயலர் இதயம் கிருஷ்ணா நன்றி கூறினார்.