விழுப்புரம்: விழுப்புரத்தில் நகையை பறிக்க முயன்ற மர்ம நபர்களிடம், மூதாட்டி ஒருவர் தனியாகப் போராடினார். இந்த சம்பவத்தில் நகை தப்பியது.எனினும், மூதாட்டி காயமடைந்தார்.
விழுப்புரம், பாண்டியன் நகர், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த பட்டாபிராமன் மனைவி சந்தான லட்சுமி (65).
இவர், திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் தனது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்களில் ஒருவர், திடீரென சந்தான லட்சுமி கழுத்தில் இருந்த சுமார் 5 பவுன் சங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால், சந்தான லட்சுமி நகையை விடாமல் பற்றிக்கொண்டு, கூச்சலிட்டார். தொடர்ந்து, அந்த நபர் நகையைப் பிடித்து இழுத்ததில், சந்தான லட்சுமி கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனிடையே, மூதாட்டியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அந்த மர்ம நபர்கள் சந்தான லட்சுமியை கீழே தள்ளிவிட்டு தப்பினர்.
இதில், மூதாட்டி காயமடைந்தார். எனினும் நகை தப்பியது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் காயமடைந்த சந்தான லட்சுமியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனு
மதித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.