விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே முகநூலில் மின்வாரிய அதிகாரி குறித்து அவதூறு பரப்பியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூரைச் சேர்ந்தவர் மதிராஜ்(45). அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இவரிடம், பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த திரிசங்கு(34) என்பவர், தனது கடைக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தாராம்.
அந்த மனு குறித்து விசாரித்த மதிராஜ், அந்த கடையானது கூட்டு பட்டாவாக இருப்பதால், மின் இணைப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த திரிசங்கு, மதிராஜ் குறித்து அவதூறுகளை முகநூலில் பதிவிட்டாராம்.
இது குறித்து மதிராஜ் ரிஷிவந்தியம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து
திரிசங்கை திங்கள்கிழமை கைது செய்தனர்.