விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடல்கல்வி இயக்குநர் பணிக்கான தேர்வை 4 மையங்களில், 2,760 பேர் எழுதுகின்றனர்.
முதுநிலை ஆசிரியர் மற்றும் உடல்கல்வி இயக்குநர் நிலை-1, பணிக்கான எழுத்துத் தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் செப்.27-ஆம் தேதி தொடங்கி செப்.29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, அனைத்துத் துறையினருக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில்
முதுநிலை ஆசிரியர் மற்றும் உடல்கல்வி இயக்குநர் பணிக்கான கணினி வழித்தேர்வை, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி மையத்தில் 600 பேரும், அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் கல்லூரியில் 900 பேர், சேதராப்பட்டு அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரியில் 600 பேர், திருநாவலூர் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் 660 பேர் என மொத்தம் 2,760 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு நாள்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், கூடுதல் பேருந்துகள் இயக்குவதோடு, மையங்கள் வழியாகச் செல்லும் பேருந்துகளை நிறுத்தி, தேர்வர்களை இறக்கிவிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
துணை ஆட்சியர் நிலையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
தேர்வு மையங்களில், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கே.கிருஷ்ணபிரியா, கே.கார்த்திகா, பா.ரவி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எம்.சேவியர்சந்திரகுமார், கே.காளிதாஸ், கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் மற்றும் முக்கிய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.