நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்து மருத்துவ சேர்க்கை பெற்றதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ், புகைப்பட ஆவணங்களை சரிபார்க்கும் பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மருத்துவப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், நிகழாண்டு மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்து, சான்றிதழ்களை சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்தந்த மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.
இதன்படி, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கி இரு தினங்களாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ.சங்கரநாராயணன்
தலைமையில் துணை முதல்வர் கே.எஸ்.பிரேம்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள், நிர்வாக அலுவலர்கள் எம்.ஆர்.சிங்காரம், ஆனந்தஜோதி உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேரின், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கை ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள், ஆதார் அட்டை, கையெழுத்து, முகவரி, அவர்கள் நீட்தேர்வில் பங்கேற்ற புகைப்பட
அனுமதி அட்டை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் புதன்கிழமை நிறைவு பெற்றதும், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்துக்கு ஆய்வு விவரம் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று, மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.