வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேரை விழுப்புரம் மாவட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி, கல்மண்டபம், ஸ்ரீ மூகாம்பிகை நகரைச் சேர்ந்த வீராசாமி மகன் கருணாகரன்(37). இவரது உறவினர் கல்மண்டபம் பகுதியை அடுத்த நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (38). இவர் தனது தம்பிக்கு வேலை வாங்கித்தரும்படி கருணாகரனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கருணாகரன், விழுப்புரம் சாலாமேடு, ஜீவராஜ் நகர், மின்வாரிய காலனியைச் சேர்ந்த கலைவாணி(எ) கலைச்செல்வி(28), விழுப்புரம் அருகேயுள்ள மிட்டா மண்டகப்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(49), புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த இளையராஜா(40) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்தால் விழுப்புரம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாராம். இதனை நம்பி, கருணாகரன் இவர்கள் 4 பேரிடம் ரூ.2 லட்சம் முன்பணத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்தாராம். ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம். இதேபோல, புதுச்சேரி அருகேயுள்ள பண்டசோழநல்லூரைச் சேர்ந்த ரத்தினவேலு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த லட்சுமணன் உறவினர்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.1 லட்சமும், சேராபட்டு குமரகுரு என்பவரிடம் நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சமும் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்தனராம்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஆறுமுகம், கலைவாணி, கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா ஆகியோரை உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.