தீபாவளி சீட்டு மோசடி: தலைமறைவாக இருந்தவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், பரமேஸ்வரி, ஆதிமூலம் (50) ஆகியோர் சேர்ந்து கடந்த 2016 - 17ஆம் ஆண்டில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். மாதம் ரூ.500 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி, அரிசி மூட்டை, இனிப்பு, காரம் போன்றவை வழங்கப்படும் என்று அவர்கள் கூறினராம்.
இதை நம்பி அந்தப் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சீட்டில் இணைந்தனராம். ஆனால், கூறியபடி பொருள்களை வழங்காமல் ஆதிமூலம் உள்ளிட்டோர் காலம் தாழ்த்தி வந்தனராம். இது தொடர்பாக, அவர்களுக்கு பணம் வசூல் செய்து கொடுத்த சக்திவேல் சென்று கேட்டபோது, பணத்தை தற்போது தர முடியாது என்று கூறினராம். இதனால், ரூ.30 லட்சம் வரையில் ஏமாற்றம் அடைத்தவர்கள் சார்பில், சக்திவேல் விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு  போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏற்கெனவே சண்முகம், பரமேஸ்வரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவான ஆதிமூலத்தை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்  ஆய்வாளர் பூங்கோதை தலைமையிலான போலீஸார் புதன்கிழமை சென்னைக்குச் சென்று ஆதிமூலத்தை கைது செய்து, விழுப்புரத்துக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com