இடைத்தேர்தலில் அதிமுக வென்றால் திட்டங்கள் தொடரும் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்: கட்சியினருக்கு அமைச்சர் அறிவுரை
இடைத் தேர்தலில் அதிமுக வென்றால் திட்டங்கள் தொடரும் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை வழங்கினார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
அதிமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கிக் கூறவேண்டும். கிராமங்கள் தோறும் சென்று திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும்.
நிர்வாகிகள், வீடுதோறும் சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும்.
விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக வெற்றி பெற்றால் திட்டங்களை தொடர முடியும். மேலும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற தேர்தல் பணியாற்றவேண்டும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், செஞ்சி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, அ.பிரபு, முன்னாள் எம்பிக்கள் ஏழுமலை, காமராஜ், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல்பாபு, நகரச் செயலர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் பசுபதி, ஒன்றியச் செயலர் பேட்டை முருகன், எல்.கண்ணன், ஜானகிராமன், கதிர்.தண்டபாணி, எம்ஜிஆர் மன்றம் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நகரச் செயலர் ஜி.பாஸ்கரன் வரவேற்றார்.