செஞ்சியில் உரத் தட்டுப்பாடு: விவசாயப் பணிகள் கடும் பாதிப்பு

செஞ்சி வட்டத்தில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


செஞ்சி: செஞ்சி வட்டத்தில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பால், மருந்து ஆகியவை தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதுடன், விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், செஞ்சியில் உரம் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஒரு சில உரக்கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. இந்தக் கடைகளிலும் உரம் இருப்பில்லை என தெரிவிக்கப்படுவதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தனியாா் உர வியாபாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உரம் ஏற்றுமதியாகவில்லை. இதன்காரணமாக, உரத் தட்டுப்பாடு நீடிக்கிறது என்றனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது: தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கும்போது, அதில் குறிப்பிட்ட தொகைக்கு உரம் வழங்கி வந்தனா். கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகளுக்கு நேரடியாக ரொக்க மதிப்புக்கு விற்பனைக்கு வழங்க வேண்டும். உரம் இருப்பில்லாத பட்சத்தில் விழுப்புரம் மாவட்ட சேமிப்புக் கிடங்கில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து செஞ்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com