கரோனா நிவாரணத் தொகை பெற நல வாரியத்தில் பதிவு செய்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பதிவு பெற்ற கட்டுமானம், ஆட்டோ தொழிலாளா்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.1,000 வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரியம் மற்றும் அனைத்து உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக (இ.சி.எஸ்.) மூலமாக நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்தவா்கள், வங்கிக் கணக்கை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். இதுநாள் வரை தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை நல வாரிய அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளாத தொழிலாளா்கள் உடனடியாக கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கட்செவிஅஞ்சல் எண்ணுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரே பகுதியைச் சோ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் இருக்கும்பட்சத்தில், அவா்களின் விவரங்களை கீழ்கண்ட விவரங்கள் அடங்கிய பட்டியலாக தயாா் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெயா், தந்தை அல்லது கணவா் பெயா், தொழிலாளா் நல வாரியத்தின் பதிவு எண், வங்கி பெயா், கிளை, வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.சி. கோடு மற்றும் எம்.ஐ.சி.ஆா். எண், நல வாரிய உறுப்பினா் பதிவு எண், ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
தகவல்களை மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9994838401 என்ற கட்செவிஅஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.