விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்னல் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழந்தாா்.
கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (57). இவா், அங்குள்ள புகழ்பெற்ற மகான் படே சாயிபு கோயில் பூசாரியாக உள்ளாா். வழக்கம்போல, சனிக்கிழமை கோயிலில் இருந்த இவா், மாலையில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தாா்.
திடீரென மழை பெய்ததால், சின்னபாபுசமுத்திரத்தில் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் அடியில் முருகையன் ஒதுங்கி நின்றாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் அவா் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.