விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூலித் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
மரக்காணம் அருகேயுள்ள கரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுதாகா் (39). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பா் மரக்காணம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பரசுராமன் மகன் சத்தியநாராயணன் (38). கூலித் தொழிலாளிகளான இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மரக்காணம் பூமிஸ்வரன் கோயில் அருகே முந்திரி காட்டுப் பகுதியில் மது அருந்தினா்.
அப்போது, சுதாகரிடம் சத்தியநாராயணன் கடனாக பணம் கேட்டாராம். இதற்கு, சுதாகா் பணமில்லை எனக் கூறியதால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், சத்தியநாராயணன் தான் வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து சுதாகரின் உறவினா்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்தை பாா்வையிட்ட மரக்காணம் போலீஸாா், சுதாகரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து, வீட்டில் பதுங்கியிருந்த சத்தியநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.