விழுப்புரம் ஆட்சியரகம் முன்பு பாஜகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்களை பாஜகவினர் சுவர் விளம்பரம் எழுதி வைத்திருந்தனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் சிலர் அழித்து அதனை வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை பாஜக மாவட்டத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டனர். இதனால் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து விட்டுச் சென்றனர். சுவர் விளம்பரங்களை அழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.